40000 முகாம்களில் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

தமிழகத்தில் நேற்று 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டன. பஸ், ரயில் நிலையங்கள் உள்பட 40000 முகாம்களில் இந்த மருந்து போடப்பட்டது.

போலியோவிலிருந்து குழந்தைகளைக் காக்க,க அந்த நோய் அதிகம் பரவக்கூடிய காலத்தில் வருடத்திற்கு 2 முறை தடுப்பு மருந்து வழங்க உலகம் முழுவதும் முடிவு செய்யப்பட்டு அனைத்து நாடுகளிலும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிலும் இந்த போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டு வருகிறது. 

தமிழ்நாட்டில் இந்த வருடத்திற்கான 2-ம் கட்ட போலியோ சொட்டு மருந்து போடும் முகாம் நேற்று நடைபெற்றது.

இதற்காக 40 ஆயிரத்து 399 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள், ரெயில் நிலையங்கள், முக்கிய பஸ்நிலையங்கள், கடற்கரை உள்பட பொதுமக்கள் கூடும் இடங்கள், அகதிகள் முகாம்கள் உள்பட ஏராளமான இடங்களில் இந்த போலியோ சொட்டு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.
 
காலையிலேயே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முகாமுக்கு ஆர்வத்துடன் கொண்டுவந்து சொட்டுமருந்து போட்டனர். மக்கள் எங்கு சென்றாலும் அவர்களின் குழந்தைகளுக்கு சொட்டு மருந்துபோடும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் போலியோ சொட்டு மருந்து முகாமாக காணப்பட்டது.

வெளி மாநிலத்தில் இருந்து கட்டுமான தொழில் உள்பட பல கூலித்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் குழந்தைகளுக்கும் சொட்டுமருந்து போடப்பட்டது. அகதி முகாம்களில் உள்ள 30 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 70 லட்சம் குழந்தைகளுக்கு நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.