
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
புது தில்லி: மக்களவையிலும், மாநில சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இடங்களை ஒதுக்க வகை செய்யும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்படுகிறது.
உலக மகளிர் தினத்தின் 100-வது ஆண்டு நாளில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
காங்கிரஸ், பாஜக, இடதுசாரி கட்சிகள், அ.தி.மு.க., தி.மு.க., தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ், அகாலி தளம், திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவை ஆதரிக்கின்றன.
சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை மேலும் குறைப்பதற்கான சதி இந்த மசோதா என அவர்கள் கருதுகின்றனர். அவர்களுக்கும் பிரதிநிதித்துவம் தர உள் ஒதுக்கீடு தேவை என இக் கட்சிகள் வலியுறுத்துகின்றன.
இன்று தாக்கல்: அரசமைப்பு சட்ட 108-வது திருத்த மசோதா என்கிற மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை விவாதத்துக்காக மாநிலங்களவையில் சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் எம்.வீரப்ப மொய்லி திங்கள்கிழமை தாக்கல் செய்கிறார்.
பிரதான கட்சிகள் இந்த மசோதாவை ஆதரிப்பதால் விவாதத்துக்குப் பின் நடைபெறும் வாக்கெடுப்பில் மசோதா நிறைவேறுவது உறுதியாகிவிட்டது.
மாநிலங்களவையில் காலியிடம் நீங்கலாக தற்போது 233 உறுப்பினர்கள் உள்ளனர். அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர குறைந்தது 155 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
மாநிலங்களவையில் 165 உறுப்பினர்கள் இந்த மசோதாவை ஆதரிக்கின்றனர்.
இவர்கள் தவிர ஐக்கிய ஜனதா தளம் கட்சி எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், அக் கட்சியைச் சேர்ந்த பிகார் முதல்வர் நிதீஷ் குமார் திடீர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தற்போதைய வடிவில் மகளிர் மசோதாவை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் கேட்டுக் கொண்டுள்ளார்.
சட்டம் என்பது தேங்கி நிற்கக் கூடியது அல்ல. மசோதா குறித்து புது வித ஆலோசனைகள் இருந்தால் அது குறித்து பேசி மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்றார் அவர்.
எந்தக் கட்சியும் உரிமை கோர முடியாது- மொய்லி: மகளிர் மசோதா நிறைவேற தாங்கள்தான் காரணம் என எந்தக் கட்சியும் தனி உரிமை கோர முடியாது என மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.
மகளிர் மசோதா நிறைவேறுவதற்கான பெருமை அனைத்தும் இந்த நாட்டு மக்களுக்கும், மகளிருக்கும், நாடாளுமன்றத்துக்கும் உரியது என்றார் அவர்.
முஸ்லிம், பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான சதி- லாலு, முலாயம்
தற்போது தாக்கல் செய்யப்படும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா முஸ்லிம், பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரானது என ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து லாலு மேலும் கூறியதாவது: மகளிர் மசோதா என்பது மாபெரும் அரசியல் பிழை. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை, சச்சார் குழு அறிக்கை பரிந்துரைகளை அமல்படுத்த திராணியில்லாத மத்திய அரசு, திசை திருப்பும் செயலாக மகளிர் மசோதாவை எடுத்துக் கொண்டுள்ளது.
சுஷ்மா ஸ்வராஜ் போன்றவர்கள் எம்.பி.யாக தேர்வு பெற இட ஒதுக்கீடு அவசியமா?
கொறடா உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால், மசோதாவுக்கு எதிராக வாக்களிப்போம் என காங்கிரஸ் மற்றும் பாஜகவைச் சேர்ந்த எம்.பி.க்கள் என்னிடம் தெரிவித்து வருகின்றனர் என்றார் லாலு.
முஸ்லிம்கள், தலித்துகள் மக்களவைக்கும், பேரவைகளுக்கும் தேர்வு செய்யப்பட கூடாது என காங்கிரஸýம், பாஜகவும் கூட்டாக சதியில் ஈடுபட்டுள்ளன என்றார் முலாயம் சிங் யாதவ்.
குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஒரு முஸ்லிம் கூட எம்.பி.யாகத் தேர்வு செய்யப்படவில்லை. நிலைமை இப்படியிருக்கையில் இந்த மாநிலங்களில் இருந்து முஸ்லிம் பெண் எப்படி எம்.பி.யாகத் தேர்வு செய்யப்படுவார் என முலாயம் கேள்வி எழுப்பினார்.
மகளிர் மீது உண்மையிலேயே மத்திய அரசுக்கு அக்கறை இருக்குமானால், மத்திய அரசு வேலைவாய்ப்புகளிலும், கல்வியிலும் 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார் அவர்.÷
13 ஆண்டு போராட்டம்
கடந்த 13 ஆண்டுகளாக இந்த மசோதாவைத் தாக்கல் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. 1997-ல் ஐ.கே.குஜ்ரால் பிரதமராக இருந்த சமயத்தில் முதல்முறையாக இந்த மசோதாவை தாக்கல் செய்ய முயன்றபோது, அவரது சொந்தக் கட்சி (ஜனதா தளம்) எம்.பி.க்களே அவரது கையிலிருந்து மசோதா நகலை பிடுங்கி கிழித்து எறிந்தனர்.பாரதிய ஜனதா தலைமையிலானதேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, அப்போதைய சட்ட அமைச்சர் ராம் ஜேத்மலானி மகளிர் மசோதாவை தாக்கல் செய்ய முயன்றபோதும் அமளி ஏற்பட்டது.
ஆண் எம்.பி.க்கள் எதிர்ப்பு?
காங்கிரஸýம், பாஜகவும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்கு அளிக்குமாறு கொறடா உத்தரவைப் பிறப்பித்துள்ளபோதிலும், அனைத்து கட்சிகளிலும் உள்ள பெரும்பாலான ஆண் எம்.பி.க்கள் இந்த மசோதாவுக்கு எதிராக உள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், கொறடா உத்தரவை மீறினால் கட்சி நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் வேண்டாவெறுப்பாகவே இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் எனவும் தெரிகிறது.
மொத்த உறுப்பினர்கள் - 233
ஆதரிக்கும் கட்சிகள்
காங்கிரஸ் 71
பா.ஜ.க. 45
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 15
அ.தி.மு.க. 7
தேசியவாத காங்கிரஸ் 6
இந்திய கம்யூனிஸ்ட் 5
தி.மு.க. 4
பிஜு ஜனதா தளம் 4
அகாலி தளம் 3
தெலுங்கு தேசம் 2
திரிணமூல் காங்கிரஸ் 2
பார்வர்ட் பிளாக் 1
எதிர்க்கும் கட்சிகள்
பகுஜன் சமாஜ் 12
ஐக்கிய ஜனதா தளம் 7
ராஷ்ட்ரீய ஜனதா தளம் 4
பா.ம.க. 1
சமாஜவாதி 12
ஆதரவு - 165
எதிர்ப்பு - 36
மற்றவர்கள் - 32